ஆலய சிவாச்சாரியார் பரம்பரை

ஈழத்திருநாட்டின் சிரமென வழங்கும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் மறைவல்ல சைவக்குருமார் பரம்பரையும், மக்களும் கருணையம்பதியில் மருதநில மத்தியிலே அமைந்துள்ள புவனேஸ்வரி அம்பாள் அருள்புரியும் ஆலயம் புதுமை மிக்கது. இவ்வாறான கோயிலிலே ஆலய சிவாச்சாரியார் பரம்பரை பற்றி நோக்குவோம்.

இவ்வாலயம் 1870ஆம் ஆண்டளவிலே சைவமரபினரான பொன்னுஞானியார் எனும் பெருமகனால் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகத்தை கோயிலிலே ஸ்தாபித்து அந்நிலத்தின் உரிமையாளரும் சிவாகம அறிவு நிறைந்தவருமான சிவசிறி சோமசுந்தரக்குருக்கள் இவ்வம்மனுக்கு பூசை செய்து வந்தார். இவர் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மனது சிலை ஒன்றைக் கொண்டுவந்து அங்கே பூசை செய்தது குறிப்பிடத்தக்கது. பக்தியும் சிரத்தையும் கொண்ட சோமசுந்தரகுருக்களால் தொடக்கி வைக்கப்பட்ட பெரும்பணி வளர்ச்சி கண்டது. இவர் இவ்வாறு பூசையாற்றி வந்தபோது எதிர்பாராது மனநோயால் பீடிக்கப்பட்டார். அதனால் பூசைகளை நிறைவேற்றும் பொருட்டு சொக்கநாதக்குருக்கள் விஸ்வநாதக்குருக்கள் அமர்த்தப்பட்டனர்.

இவர்களை அடுத்து செவ்வந்திநாதக்குருக்கள் நியமிக்கப்பட்டார். இவ்வாலயம் பொலிவுரும் காலத்தில் செவ்வந்திநாதக்குருக்கள் நோய்வாய்ப்பட்டு சிவபாதமடைய அவரது புதல்வரான விஸ்வநாதக்குருக்களும், உடன்பிறவாத சகோதரனான சட்டநாதகுருக்களும், சதாசிவக்குருக்களும் உறுதுணையாக அம்மாளின் பணிகளை ஆற்றிவந்தனர். 1993 புரட்டாதி முதல் சதாசிவக்குருக்களது உதவியுடன் கனகசபேசக்குருக்கள் பிரதமகுருவாக இருந்து அம்பாளின் பணிகளை சிறப்பாக ஆற்றினார். இன்றுவரை இவர்களே பூசைகளை ஆற்றிவருகின்றனர்.

Geen opmerkingen: