பெயர் விளக்கம் ( இடத்தின்)

ஈழத்திருநாட்டின் சிரமென விளங்கும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் மறைவல்ல சைவக்குமார் பரம்பரையினரும் மக்களும் மருவி வாழ்கின்ற கருணையம்பதியில் மருதநில மத்தியிலே அமைந்துள்ள புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் புதுமைமிக்கது. புவனேஸ்வரியும் அவள் வண்ணமாய் கண்ணகியும் வீற்றீருந்து அருள் புரிவது புதுமையிலும் புதுமை. இதனருகே அமைந்துள்ள வற்றாத நீர்ச்சுனையாகிய மாணிக்கவளை என அழைக்கப்படும் குளம் ஆலயத்திற்கு மெருகை ஊட்டுகிறது.

அவ்வகையிலே கரணவாய் உச்சில் புவனேஸ்வரியம்மன் என்பதன் பெயர் விளக்கத்தை நோக்கின் யாழ்ப்பாணத்தை சங்கிலி மன்னன் ஆண்ட காலத்திலே சைவக்குருமார் பரம்பரை இவ்விடம் இருக்கவில்லை. அதனால் சங்கிலி மன்னன் 1520ம் ஆண்டளவிலே சைவக்குருமார் பரம்பரையை இவ்விடம் கொண்டு வர விரும்பினான். அவனது விருப்பதிற்கிணங்க சரபோஜி மகராஜா என்பவன் இந்தியாவிலிருந்த மூன்று சைவக்குரு பரம்பரையை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தான். அதில் ஒரு குரும்பம் வரணியில் இருந்தது. மற்றையவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பில் இருந்தனர்.

இதில் வரணியில் இருந்த குடும்பம் இவ்விடத்தில் வந்து குடியேறினர். அப்போது உடுப்பிட்டிக் கிராமத்திலே உடையவர், முதலியார் என்றழைக்கப்பட்டவர்கள் இந்தச் சைவக்குருமார் பரம்பரைக்கு அவர்கள் இருந்த காணியை சொந்தமாக எழுதிக் கொடுத்தனர். அந்தச்சைவப் பரம்பரையானது கர்ணபரம்பரை என அழைக்கப்பட்டது. கர்ணபரம்பரை என்பதில் கர்ண என்பது கணக்குப்பார்த்தல் எனப்பொருள்படும். அதாவது சரபோஜி மகராஜா காலத்திலிருந்து அவர்கள் கணக்குப் பார்க்கும் தொழிலையே செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க, உடுப்பிட்டி உடையார் காணியை சைவக்குரு பரம்பரைக்கு எழுதிக் கொடுக்கும் போது காணிக்கு என்ன பெயர் இடலாம் என யோசித்தனர். பின்னர் கர்ணபரம்பரையாக சைவக்குருமார் பரம்பரை இருந்ததால் அவ்விடத்திற்கு கர்ணவாய் எனப்பெயரிட்டனர். இக் கர்ணவாய் என்பதே காலப்போக்கில் திரிபடைந்து கருணையாவாக மாறி தற்போது கரணவாயாக மாறியது.

இவ்வாறாக கரணவாய் பகுதியிலே வயல்கள் சூழ்ந்த இடமாகிய இவ்வாலயம் அமைந்த சூழலில் உள்ள வயல்கள் உச்சில் என்றழைத்தனர். அவ்வாறான உச்சில் வயல்கட்கருகில் இப்புவனேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்திருந்ததால் கரணவாய் உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம் எனப்பெயர் ஏற்பட்டது.

Geen opmerkingen: