வரலாற்று நோக்கில் அம்மன் வழிபாடு

இந்து மதத்தின் அம்மன்வழிபாடு மிகப்பழைய காலம் தொட்டே நடைபெற்று வருகிறது. புதைபொருளாய்வுகளும் சரித்திர வரலாறுகளும் சமய தத்துவ நூல்களும் இதற்கு ஆதாரமாகின்றது. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட சிந்துவெளிப் புதைபொருள் ஆராட்சியின் மூலம் சக்தி வழிபாட்டின் தொன்மையை அறியமுடிகிறது. ஹப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கருவுயிர்க்கும் இலட்சனை, சக்தி வழிபாட்டை குறிப்பதாக அறிஞர் கூறுவர். இவ் வழிபாடு பூமியை தரைப் பெண்ணாகக் காணும் தன்மையை எடுத்துகாட்டுகிறது. இக்காரணம் இன்றும் இந்துமக்கள் உள்ளங்களில் இருந்து விலகவில்லை.

பூமியை பூமாதேவி என அழைப்பர். பூமி மக்களின் வாழ்வுக்கு வளம் ஊட்டுகிறது. உயிர் வாழ்வை உரமூட்டுகிறது. குழந்தைக்கு பால் ஊட்டி வளர்ப்பவள் தாய். எனவே பூமியும் தாயும் ஒன்றெனக் குறிக்கலாம். உடல் உயிருக்கு வாழும் சக்தியைக் கொடுக்கும். பூமியும் தாயும்(சக்தி) பெண்ணெறே கண்டனர். எனவே சக்தி என்றால் பெண்ணைக்குறிக்கும். இவ்வாறு இந்து மதத்தில் பெண்மை வழிபாடு அமைந்துள்ளது.

ஹரப்பா காலத்திற்கும் குப்தர் காலத்திற்கும் இடையில் சக்தி வழிபாடு கருத்தூன்றி இருந்ததேயன்றி சிறப்பான வழர்ச்சி பெறவில்லை. சக்தி என்ற கருத்து மக்களிடையே நிலையூன்றி இருந்தது. இக் கருத்தை ஆதரிக்குமாற் போல இருக்கு வேதம் துணைநின்றது. சக்தியை இயக்குசக்தி, இயங்குசக்தி என வகைப்படுத்தலாம். இயங்குசக்தியும் இயக்குசக்தியுமாயுள்ள தெய்வம் சூரியன். அவனுக்குரியது சாவித்திரி மந்திரம் அல்லது காயத்திரி மந்திரம் ஆகும். சவிதா என்னும் சொல்லுக்கு இயக்குபவன் என்பது பொருள். உலகை இயக்குபவன் ஆதலால் இயக்குசக்தி சூரியனிடம் உண்டு. அவனை இயக்குகின்றவள் உஷையும் அக்கினியும் ஆகும். உஷை தாய் என்றும் அக்கினி காதலி எனவும் போற்றப்பட்டனர்.வேத காலத்திலும் சக்திவழிபாடு இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் ஆகமங்கள் தோற்றம் பெற்றன. ஆகமங்கள் உருவம் அமைத்து வழிபடும் நிலையை ஊக்குவித்தன. உருவங்களில் சக்திக்குரிய இடப்பாகத்தையும் வரையறுக்க தவறவில்லை. அர்த்தநாரீஸ்வரர் உருவம் சக்திக்குரிய சமபங்கம் கொடுத்த தன்மையை முன் வைக்கின்றது. சிவனுக்குரிய நிலையை உருவ அமைதியை எடுத்துகாட்டும் இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றின. இவை சிவனால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சக்திக்குரிய ஆகமங்கள் இருபத்தேழு தோற்றம் பெற்றன. இவை சக்தியால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சிவனுக்கு நவசக்திகள் உண்டு.அவை வாமா, ஜேஸ்ட்டா, ரெளத்திரி, காளி, கல்விகரணி, பலவிகரணி, சர்வபூதமணி எனப்படும். இக்காரணத்தால் 9 எண்வரக்கூடிய 27 ஆகமங்கள் தோற்றம் பெற்றது.

சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது. சக்தி இன்றேல் சிவமில்லை, சிவமின்றேல் சக்தியில்லை என்னும் கருத்து வளர்ச்சியினூடு புறச்சமயங்களின் தாக்குதலால் சக்திக்கு தனி உரிமை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையாலும் புராணங்களின் செல்வாக்கு நிலையாலும் சாக்தம் என்ற மதம் உருவாகியது. சாக்தமதம் சக்தி ஆதாரம். சிவம் ஆதேயம் எனக்கூறி சைவக் கொள்கையிலிருந்து விலகியது. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதமே சாக்தம் ஆகும். சைவம் தத்துவநிலையில் சக்திக்கு இடம் கொடுத்தது. முதன்மை வேறுபாடே இருமதத்திற்கும் வித்தியாசம். பிருங்கி முன்வர் சிவத்தையன்றிச் சக்தியை வழிபடுவதில்லை. என்னும் கொள்கையைப் புராணங்கள் எடுத்துக்காட்டிப் பிரிவினையை வேரறுத்த வரலாறு உண்டு. அம்மையே சிவனைப் பூசித்த வரலாறும் உண்டு. இவை யாவும் சிவனையும் சக்தியையும் இணைத்துள்ளன.

சாக்த சமயம் அம்மன் வழிபாட்டை புதிய நிலையில் வகுத்துக்காட்டின. அம்மாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது கோடுகளாலான யாத்திர வழிபாடாகும். அவ்வழிபாட்டின் பலியிடுதலையும் குறிப்பிடுகின்றன. சக்தி வழிபாட்டில் யாத்திர வழிபாட்டை "சிறீசக்கர பூசை என்பர். இதனை ஸ்ரீவித்யோ பாசனை என்றும் குறிப்பிடுவது வழக்கம். இது 3 வகைப்படும். அதில் பூப்பிரஸ்தார யந்திரமே இலங்கையில் காணப்படுகிறது. பொன்னம்பலவாணேசர் கோவில் ராஜராஜேசர் முன்னிலையிலும் நயினை நாகபூசனி அம்பாள் முன்னிலையிலும் முன்னேஸ்வர ஆலயத்தில் வடிவாம்பிகை முன்னிலையிலும் சக்கர யந்திரத்தில் எழுதப்பட்ட மந்திரங்களை உபாசிக்கும் போது அது பயன்கொடுப்பதில் பெருமையுள்ளதாகிறது. இவ் வழிபாட்டின் அடிப்படையில் சிவனாலயங்களிலும் விக்கிரகங்களின் கீழ் யந்திரம் வைத்து மருந்து சார்த்தப்படுகிறது.

அடுத்தநிலையில் அம்மன் வழிபாட்டில் பலியிடுதல் சிறப்பானதொன்று. கர்ப்பூராதி ஸ்தோத்திரம் என்னும் நூலில் செம்மறியாடு, ஒட்டகம், பூனை, எருமை முதலியவற்றை பலியிடும்படி கூறப்படுகிறது. உண்மையில் இவைகளைப் பலியிடுதல் அல்ல. இவைகளின் குணங்கள் மனிதனிடத்தில் உள்ளன. அக்கெட்ட குணங்களை மனிதன் பலியிட வேண்டும். அங்கேயே நல்லொளி தெரியும். ஒளியைத் தாங்கியுள்ள தீபம் அம்பாள் எனப் போற்றப்பட்டு திருவிளக்கு வழிபாடும் அம்பாளுக்கே ஆயிற்று.

பராசக்தியாகிய அம்பாள் அறக்கருணை மூலமும் மறக்கருணை மூலமும் அருள்செய்ய வல்லவள். அதாவது அன்பின் மூலமும் தண்டித்தல் மூலமும் அருள் செய்வாள். அம்பாள் வழிபாட்டை புராணங்கள் விரிவுபடுத்தின. தேவி பாகவதம் அம்பாளுக்கு முதன்மை கொடுத்து அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களையும் அவற்றுக்குரிய மந்திரங்களையும் சிறப்பித்தன. பராசக்தியின் வெவ்வேறு தோற்றங்களாக கௌரிமனோன்மணி, சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகமாரி என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் மகமாரி மாரகாசுரனை சங்காரம் செய்ததால் அப்பெயர் பெற்றாள் என காரணாகமம் கூறுகின்றது. இவளது தலையைச் சுற்றிலும் அக்கினிச் சுவாலைகள் தோன்றும். கபாலம், சக்தி, பாசம், உடுக்கு என்னும் நான்கு ஆயுதங்களை இவள் ஏந்தி நிற்பாள். இந்த அடிப்படையை கொண்ட முத்துமாரி வழிபாடும் தோன்றி இருக்கலாம்.

குப்தர் காலத்தில் சக்திக்குரிய கோயில்கள் உண்டு. சந்திரகுப்தனுடைய நாணயத்தில் சிங்கத்தின் மீது அம்மன் எழுந்தருளியிருக்கும் நிலை பொறிக்கப்பட்டுள்ளது. குப்த மன்னரே பெண் தெய்வங்கட்கு விக்கிரம் அமைக்கும் பாணியை தோற்றுவித்தனர். அதன் சாயலாக தமிழ் நாட்டில் பெண் தெய்வங்களுக்கு விக்கிரகம் அமைத்தல் முறை பின்பற்றப்பட்ட பின் வந்த காலங்களில் பெரிய மண்டலங்களுடன் கூடிய ஆலயங்கள் தோற்றம் பெறலாயின.

காளிதாச மகாகவியும் சக்திமீது பல பாடல்களை பாடியுள்ளார். இதிகாச புராணத்தில் தாட்சாயினி, பார்வதி பற்றிய கருத்துக்கள் உண்டு. சிவ புராணத்தில் உமை தன்னை பிரமமாகவும், பேரொளியாகவும் பரந்த இவ்வுலகமாகவும் காரண காரியமாகவும் எல்லாமாகவும் இருப்பதாகவும் கூறுகின்றது. மார்க்கண்டேய புராணம் சக்தியின் பெருமைகள், வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் புராணங்களது குறிப்பின்படி சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் 3 தெய்வங்களினதும் பேரொளியிலிருந்து சக்தி தோற்றம் பெற்றாள் எனக் குறிப்பிடுகின்றது.

தென் இந்திய வரலாற்றுக்காலங்களில் சங்ககாலத்திலிருந்து சக்தி வழிபாடு சிறப்படைந்திருந்தது. பாலை நில மக்கள் கொற்றவையை வழிபட்டிருந்தனர். அக்கால நூலின் "ஓங்கு புகழ் காமர்ச்செல்வி" எனவும் திருமுருகாற்றுப்படை வெற்றிவேல் போர்க்கொற்றவை எனவும் குறிப்பிடுகின்றது.

மணிமேகலை, சிவப்பதிகாரம் போன்ற நூல்களில் சக்தியானவள் காளி, மகாசரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை என்ற பெயர்கள் உண்டு. காரைக்காலம்மையார் சிவனைப் போற்றி பாடும்போது சக்தியினையும் போற்றிப் பாடியிருந்தமை குறித்தற்குரியது.

பல்லவர் காலப்பகுதியில் சக்திவழிபாடு சைவத்துடன் இணைந்து வளர்ந்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் ஆதாரப்படுத்துகிறது. " அம்மையே அப்பா இப்பிலாமணியே.. மங்கயர்க்கரசி.., பிடியதனுருவுமை.., மாதர்ப்பிறைக்கண்ணியானை..," இதைவிட சங்கரரது பிரபஞ்சசாரம், சௌந்தர்யலகரி போன்ற நூல்களிலே சக்தி போற்றப்படுகின்றன.

பல்லவர் காலத்தின் பின்பும் சக்திவழிபாடு சிறப்புற்றிருந்தது. சோழர் காலத்தில் சக்திக்குரிய தலங்கள் அமைக்கப்பட்டன. சோழர்கள் ராஜராஜேஸ்வரியையும், பாண்டியர் நாயக்கர் மீனாட்சியையும் வழிபட்டிருந்தனர். நாயக்கர் காலத்தில் மதுரை மீனாட்சி கோயில் முழுமையாக அமைவுபெற்றிருந்தது. குமரகுருபரர் சகலகலாவல்லிமாலையையும் அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியையும் சக்திமீது பாடினர்.

கஜபாகு மன்னர் காலத்தில் கிராமிய வழிபாட்டின் அம்சமாக கண்ணகி வழிபாடு தோற்றபெற முத்துமாரி அம்மன் வழிபாடும் கிராமிய வழிபாட்டில் தன் இடத்தை எடுத்துக்கொண்டது. இம்முத்துமாரி காத்தவராயனின் தாயாகவும் காணப்பட்டாள். இவளுக்கு கரகமெடுத்து நேர்த்திக்கடனை கிராமிய மக்கள் நிறைவேற்றினர். இவள் முத்துமாலையை கோபத்தால் வீசியபோது அம்பாள் நோய் தோன்றியதெனவும் குளிர்த்தி, கரகம் முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதால் நோய்தீர்ந்தது எனவும் கர்ணபரம்பரைக் கதையொன்று கூறும்.

பிரதேசத்துக்கு பிரதேசம் கிராமத்திற்கு கிராமம் அம்மன் வழிபாடு சிறப்புப்பெற்றது. பொதுவாக மக்கள் கரகம்,காவடி, குளிர்த்தி என்பவற்றால் வழிபாட்டை நிறைவேற்றுகின்றனர். மேற்கூறிய பெண்தெய்வ ஆலயங்கள் சீரும் சிறப்பும் பெற்று ஆகமமுறைப்படியாக பெரிய ஆலயங்களாக உருப்பெற்றன.

இந்தியாவின் வட நாட்டிலேயே மிகுதியான செல்வாக்கை சக்தி வழிபாடு பெற்றுள்ளது. அச்செல்வாக்கு தென் நாட்டிலும் வலுப்பெற்றுள்ளது. உதாரணமாக நவராத்திரியை தென்னாடு பெற்றுக்கொண்டது. தசரா என்னும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது சான்றாகிறது. வட நாட்டில் வாழ்ந்த காளிதாசர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்றோர் அம்பாள் உபாசகர்களே. குமரகுருபரர், அபிராமிபட்டர் போன்றோரும் தென்நாட்டு அம்பாள் உபாசகரே. " தனம் தரும் கல்வி தரும்..." என அபிராமிப்பட்டர் கூறியுள்ளார். இவ்வாறான சக்திக்குரிய சிறந்த விரதமாக நவராத்திரியையும், கணவனைப்பெற கார்த்தியாயினி விரதமும் கன்னிப்பெண்கள் அனுஷ்ட்டிப்பர். கேதாரகௌரி விரதம் உமை சிவனை அடைந்த வரலாற்றைக் கூறுகிறது எனலாம்.

20ம் நூற்றாண்டிலே அம்பாள் வழிபாடு சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதைக் காணலாம். வீடுகள், பாடசாலைகள், வேலத்தளம் என்பவற்றில் நடராத்திரி கொண்டாடப்படுகிறது. இவ்வாறு வரலாற்று நோக்கிலே அம்மன் வாழிபாட்டினைப் பற்றிக்கூறலாம்.

Geen opmerkingen: